நடிகர் விஜய் காங்கிரசில் சேர்ந்தால் வரவேற்போம்: ராகுல் காந்தி
[தமிழக நேரம் : September 10th, 2009 at 06:44]
நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் வரவேற்போம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி கூறினார்.
தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் ராகுல் சென்னை தாஜ் ஓட்டலில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து பேசினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல்காந்தி கூறியதாவது:
நடிகர் விஜய் உங்களை சந்தித்து பேசியது பற்றி?
அது ஒரு சம்பிரதாயமான, நட்புரீதியான சந்திப்புதான். காங்கிரஸ் கட்சியில் அவர் சேருவது பற்றி நாங்கள் பேசவில்லை. காங்கிரஸ் கட்சியில் அயோக்கியர்கள், மோசடி பேர்வழிகள், கடத்தல்காரர்கள் போன்றவர்களை தவிர யார் வேண்டுமானாலும் சேரலாம். நடிகர் விஜய்யும் காங்கிரசில் சேர்ந்தால் வரவேற்போம். 35 வயதை தாண்டியவர் என்பதால், இளைஞர் காங்கிரசில் அவருக்கு வாய்ப்பு இல்லை.
நாட்டின் இளம் பிரதமராக நீங்கள் வருவீர்களா?
நமக்கு பிரதமர் ஒருவர் இருக்கிறார். அவர் (மன்மோகன்சிங்) சிந்தனையில் இளையவர்தான்.
உங்கள் காதலி... திருமணத்தைப்பற்றி...?
நீங்கள்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காதலியை உருவாக்குகிறீர்கள். திருமணம் பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இனிமேல்தான் அதுபற்றி சிந்திக்க வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் நீங்களும், சோனியாவும் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு பற்றி?
இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அதற்காகத்தான் அப்போதைய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி, பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் போன்ற உயர் அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இலங்கை பிரச்சினையில் மற்ற நாடுகள் தலையிட்ட அளவுக்கு இந்தியா தலையிடவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. இந்தியா முதலில் தலையிட்ட பிறகுதான், மற்ற நாடுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டன. காங்கிரஸ் கட்சியும், எனது பாட்டி இந்திராகாந்தி, தந்தை ராஜீவ் காந்தி, தாயார் சோனியா ஆகியோரும் இலங்கை தமிழர்களுக்காக அதிக அக்கறை செலுத்தி உள்ளனர்.
நானும் இந்த பிரச்சினையில் அக்கறை காட்டாமல் இருந்தது இல்லை. அப்படி இருந்திருந்தால் மதுரையில் எனக்கு இந்த அளவுக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து இருக்க மாட்டார்கள். வயதான பெண்கள் கூட நீண்ட நேரம் காத்திருந்து வரவேற்பு கொடுத்தனர். எனவே இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் மீது தமிழ்நாட்டில் தவறான கருத்து இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.
தி.மு.க-காங்கிரஸ் உறவு எப்படி உள்ளது?
தி.மு.க.வுடன் காங்கிரசுக்கு கருத்து ஒற்றுமை உள்ளது. அனுபவமிக்க மூத்த தலைவரான தி.மு.க. தலைவர் கருணாநிதியை மதிக்கிறேன். அவரை பலமுறை சந்தித்து பேசி இருக்கிறேன்.
தமிழக காங்கிரசில் உள்ள கோஷ்டி பூசல் குறித்து உங்கள் கருத்து என்ன?
இங்குள்ள கட்சி பிரச்சினைகளை மாநில காங்கிரஸ் தலைவர் தீர்த்து வைப்பார். எனது பணி இளைஞர் காங்கிரசை வலுப்படுத்துவதுதான்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைவது எப்போது?
காமராஜர் ஆட்சி பற்றி மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் மக்கள் பணி, பெருமை, வரலாறு, 100 ஆண்டு கால பாரம்பரியம், தொண்டர்களின் அயராத உழைப்பு போன்றவற்றின் அடிப்படையில் கட்சியின் எதிர்காலம் அமையும்.
இளைஞர் காங்கிரசை வலுப்படுத்துவதன் நோக்கம் என்ன?
இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரவேண்டும். அப்போதுதான் மக்களுக்கு சேவை செய்வதற்கு காங்கிரசில் இளைஞர் படை கிடைக்கும். என்னை பொறுத்தவரை, நான் காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய பொது செயலாளர். அமேதி தொகுதியின் எம்.பி.யாக இருக்கிறேன்.
இளைஞர் காங்கிரசில் தலைவராக இதுவரை இளைஞர்கள் இருந்தது இல்லை. 39 வயதை தாண்டிய நானும் இளைஞர் அல்ல. நான் இளைஞர் காங்கிரசில் உறுப்பினர் அல்ல என்றாலும் அதை வலுப்படுத்தும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன்.
பஞ்சாப், குஜராத் போன்ற மாநிலங்களில் காங்கிரசுக்கு மக்கள் மத்தியில் புதிய எழுச்சி ஏற்பட்டு இருப்பதை எனது சுற்றுப்பயணத்தின்போது பார்க்க முடிந்தது. புதுச்சேரியில் 30 சதவீதத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் காங்கிரசில் சேருவதற்கு தயாராக உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் தேர்தல் நேர்மையுடன் நடைபெறும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
(டிஎன்எஸ்)
|