புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம் - அனலை நிதிஸ் ச. குமாரன்
[தமிழக நேரம் : February 7th, 2010 at 21:21]
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது ஆதரவை நல்க வேண்டுமெனவும் வெளிவிகார அமைச்சர் யாழ் நூலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவித்தார். ஜனவரி 30 , 2010 அன்று திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு யாழ் சென்ற அவர் நல்லூர் முருகன் கோவில் சென்று வழிபட்ட பின்னர் யாழ் நூலகம் சென்ற அவர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து யாழ்ப்பாணத்தில் அரசு உத்தேசித்துள்ள வேலைத்திட்டங்களை அறிவித்தார்.
அவரின் அறிவிப்புக்களில் முக்கியமானது இரண்டு விடயங்கள், அதாவது அரசு மேற்கொள்ளவுள்ள வர்த்தக அபிவிருத்திகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் உதவ வேண்டுமெனவும் மற்றது வெளிவிவகார அமைச்சின் உதவிக் காரியாலயம் ஒன்று நிறுவ இருப்பதாகவும் தெரிவித்தார். இக்காரியாலயம் புலம்பெயர் தமிழரின் தொடர்பைப் பேணி அவர்களுடன் நல்லதொரு உறவை வளர்க்கும் எனவும் அறிவித்தார். ஆனால் தமிழர் அரசியல் நோக்கர்கள் அரசின் இந்த நடவடிக்கையின் மீது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளார்கள். அரசாங்கத்தின் சூழ்ச்சி என்னவென்றால் யாழ் பிரதேசத்தை வர்த்தக மையமாக அறிவிப்பதன் மூலம் புலம்பெயர் தமிழர் தங்களது பணத்தை யாழில் முதலிடுவார்களென்றும் பின்னர் அந்தப் பணத்தை அரசாங்கம் தமது பிற சுய வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தலாமென்றும் அத்துடன் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலை தமது வெற்றிக்கு இந்த நடவடிக்கையை சாதகமாக்கிக் கொள்ளலாமென்றும் நப்பாசையுடன் களம் இறங்கியிருப்பதாகவும் தமிழர் அரசியல் நோக்கர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.
அத்துடன் சிங்கள இனவெறி அரசு புலம்பெயர் தமிழருக்குள் ஊடுருவி பல நாசகார வேலைத்திட்டங்களை செயல்படுத்தி அவர்கள் மனங்களில் உள்ள தமிழ் ஈழ விடுதலைக் கனலை அணைத்து விடலாமென்றும் இதற்கு இப்படியான காரியாலயங்களை நிறுவி சில வேலைத்திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் தமிழரின் மனங்களை வென்று வெளிநாடுகளில் வதியும் ஈழத்தமிழரின் செயற்பாடுகளை சிதைக்கலாமென்ற மமதையுடன் களம் இறங்கியிருக்கின்றார்கள் போலும்.
எதற்காக வெளிவிவகார அமைச்சர் வர்த்தகத்தை பற்றி வக்காளத்து?
வெளிவிவகார அமைச்சர் தனது இலாக்காவை விட ஏன் மற்றதொரு இலாக்காவான வர்த்தகத்தை பற்றி பேசியுள்ளார் என்று பல நோக்கர்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்கள். அதாவது வெளிவிகார உதவிக் காரியாலயம் ஒன்றை யாழில் தொடங்குவதற்கு ரோகித்தவுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் வர்த்தகத்தைப் பற்றி பேசுவதற்கோ செயல் நடவடிக்கையை அறிவிப்பதற்கோ அவருக்கு அதிகாரங்கள் இல்லாமல் இருந்தும் யாழில் வர்த்தக மேம்பாட்டை மேற்கொள்ள புலம்பெயர் தமிழர் உதவ வேண்டுமென அறிவித்திருப்பதன் நோக்கம் புலம்பெயர் தமிழருக்குள் தனது அமைச்சின் செல்வாக்கை பிரயோகிக்க முனைந்திருக்கின்றார் என்பது மட்டும் தெட்டத்தெளிவாக தெரி;கின்றது.
சிறி லங்கா அரசாங்கம் வறுமைக்கோட்டின் கீழ் சென்றுகொண்டுள்ளது என்பது எல்லோரும் நன்கு அறிவார்கள். இதில் இருந்து மீளுவதற்கு பல நடவடக்கைகளை செய்யவேண்டியுள்ளது. மிக முக்கியமானதொன்று என்னவென்றால் தமிழினத்தை தமது தலைமையின் கீழ் கொண்டுவந்து உலக நாடுகளுக்கு தமது அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை அறியப்படுத்துவதன் மூலம் உலக நாடுகளின் நற்பை சம்பாதிக்கலாமென்றும் பின்னர் பல கோடிக்கணக்கில் பணத்தை கடனாகவோ நன்கொடையாகவோ பெற்று தமது செல்வாக்கை நிலைநிறுத்தி பாராளுமன்ற தேர்தலிலும் தாம் வெற்றிபெற்று அரச நாற்காலியைத் தக்கவைத்து ஆட்சி புரியலாமென்ற முனைப்புடன் வேலைத்திட்டங்களை செயல்படுத்துவதின் ஒரு வடிவமே இந்தப் பொருண்மிய அபிவிருத்தி நாடகம்.
உலக நாடுகள் பல சிங்கள அரச பயங்கரவாத ஆட்சியை வெறுத்தார்கள் என்றால் அது மிகையாகாது காரணம் மகிந்த அரசு தமிழருக்கு எதிராக செய்த மனித உரிமை மீறல்கள். ஏன் ஐரோப்பிய ஒன்றியம் கூட பொருட்களுக்கான வரிச்சலுகையை நிறுத்தி தமது ஆட்சேபனையைக் காண்பித்தார்கள். பல ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பை பல முனைகளில் இருந்து மகிந்த எதிர்கொண்டார். இருந்தும், அவர்களை அவமதித்து தனது இராணுவ நடவடிக்கைகள் மூலமாக இந்த நூற்றாண்டில் மனித குலமே கண்டிராத அவலத்தை அரங்கேற்றினார்.
பல வெளிநாடுகள் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை சமாதான வழிகளின் மூலம் தீர்வுகாணும்படி வற்புறுத்தியும் சிங்கள அடக்குமுறை அரசுகள் செவிசாய்க்காமல் விடுதலைப் புலிகளின் மீது பழியை போட்டுவிட்டு பயங்கரவாதத்திற்கான யுத்தம் புரிவதாக மார்தட்டி உலக சமூகத்தை முட்டாள்களாக்கினார்கள். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் ஆயுத முனையிலான தற்காப்பு யுத்தத்தை செய்துகொண்டிருந்தார்கள் ஆனால் இந்த உலக சமுகத்தின் கண்மீது ஈழத்தமிழரின் போராட்டம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையில் நடைபெற்ற சமாதான ஒப்பந்தத்தில் எவ்வாறு புலிகள் தமது கொள்கையில் திடமாக இருந்து பின்னர் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான உயிர்களின் பாதுகாப்புக்காகத் தமது ஆயுதத்தை மௌனிக்க செய்ததானது நிச்சயம் பல வெளிநாடுகளின் நற்பெயரை பெற்றுத்தந்தது என்றால் அது மிகையாகாது. இருந்தும் என்ன பலன்? சிங்கள ஆட்சி தமது இனச் சுத்திகரிப்பு வேலைத்திட்டங்களை தொடந்தும் செய்துகொண்டுள்ளார்கள். இதற்கான களமே யாழில் நிறுவப்பட இருக்கும் வெளிவிகார அமைச்சின் உதவி காரியாலயம்.
தமிழ் இனத்தையே அழித்து முழுத் தீவையும் சிங்கள பௌத்த நாடாக கொண்டுவரவேண்டும் என்று கங்கணம் பூண்டிருக்கும் மகிந்தவிடம் எப்படி நாம் எமக்கு சார்பாய் செயலாற்றுவார் என்று நம்புவது. இந்த நடவடிக்கைகளுக்கு சோரம் போகும் தமிழர்களும் நிச்சயம் தமிழர் துரோக கும்பல் வழிப்பட்டியலில் இடம்பெறுவார்கள் என்பது தான் உண்மை.
வவுனியா வதைமுகாமில் அடைத்து வைக்கப்பட்டுப் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டவர்களில் ஏறத்தாழ 80,000 மக்கள் யாழ் கொண்டு செல்லப்பட்டு இன்றும் அவர்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துக்கொண்டுள்ளார்கள். அவர்களில் சிலர் தமது உறவினர் வீடுகளில் இருக்கின்றார்கள்; மற்றவர்கள் வெளி நிலங்களில் கூடாரம் அமைத்து வாழ்ந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவரையும் முகாம்;களில் இருந்து விடுவிக்கும்போது அரசாங்கம் கூறியது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமது வாழ்வை மீழ ஆரம்பிக்க பணம் கொடுப்பதாக, ஆனால் இன்று வரை அரசாங்கம் ஒரு சதம் காசு கூட கொடுக்கவில்லை. ஆனால் உலக நாடுகளுக்கு வாக்குறுதி கொடுத்தார்கள் தாம் இம்மக்களுக்கு பணம் கொடுப்பதாக. ஆக இதிலிருந்து தெரிகிறது இந்த இனவெறி சிங்கள அரசாங்கம் எப்படி தமிழரின் பொருளாதார வளர்ச்சியில் கரிசனை காட்டுவார்களென்று.
தொடர்ச்சி...
|