புலிகளை முற்றுகைக்குள் கொண்டுவந்த படைப்பிரிவு விஜயபாகு படையணி என்று அறிவிப்பு!
[தமிழக நேரம் : February 4th, 2010 at 07:40]
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை முற்றுகைக்குள் கொண்டுவந்த சிறிலங்கா இராணுவத்தினரின் படைப்பிரிவு விஜயபாகு காலாற்படையணி என்று சிறிலங்கா இராணுவத்தளபதி லெப்ரினென்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய அறிவித்துள்ளார். குருனாகல் போயகன பிரதேசத்தில் அமைந்துள்ள அந்த படைப்பிரிவின் தலைமையகத்துக்கு சென்ற இராணுவ தளபதி இந்த அறிவிப்பை விடுத்து அந்த படையணிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
போரின் இறுதிக்கால கட்டத்தில் வன்னியின் கிழக்கு பகுதியில் நந்திக்கடலுக்கு அருகைமையில் இடம்பெற்ற உச்சக்கட்ட சமரில் சிறிலங்கா இராணுவத்தின் விஜயபாகு காலாற்படையணி நாலாவது படைப்பிரிவினரே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட அவரது மெய்பாதுகாவலர்கள் அணியை முற்றுகையிட்டு தாக்கியதாகவும் -
முகமாலை முன்னணி காலரண் பகுதியில் பொறுப்பாக இருந்த 53 ஆவது படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண தலைமையிலான படைப்பிரிவும் விஜயபாகு காலாற்படையணியுடன் இணைந்து கடைசி போரில் கடும் சமர் புரிந்ததாகவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையிலான அணியினரை முற்றுகைக்குள் கொண்டுவந்த சிறிலங்கா இராணுவத்தின் படையணிகள் தொடர்பாக முதலில் பல்வேறு குழப்பங்கள் நிலவியதாகவும் இது தொடர்பாக அனைத்து கள தகவல்களையும் உள்வாங்கி ஆராய்ந்ததில் விஜயபாகு காலாற்படையணியின் நாலாவது படைப்பிரிவே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையிலான அணியினரை முற்றுகைக்குள் கொண்டுவந்து தாக்கி அழித்தது என்ற முடிவை இறுதியில் தாம் பெற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
போர் இடம்பெற்ற மூன்று வருட காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் அனைத்து முன்னரங்கு நிலைகளின் மீதான தாக்குதல்களிலும் விஜயபாகு காலாற்படையணியினரே முக்கிய தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் ஆனாலும் இன்று நடைபெறுகின்ற சிறிலங்காவின் 62 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளில் அந்த படையினருக்கு சிறிலங்கா அரசு அந்த அங்கீகாரத்தையும் வழங்கவில்லை என்று கொழும்பை சேர்ந்த இராணுவ ஆய்வாளர் சமீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
|