பொதுத்தேர்தலில் 'புளொட்' தனித்து போட்டியிடவுள்ளதாம்: சித்தார்த்தன் தெரிவிப்பு
[தமிழக நேரம் : February 8th, 2010 at 14:36]
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புளொட்டும் தனித்து போட்டியிடப்போவதாக அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஆளும் மகிந்த அரசுக்கு தாம் தொடர்ந்து ஆதரவளித்துவருகின்றபோதும் வடபகுதியில் போட்டியிடவுள்ள தமது கட்சி தனித்தே களத்தில் குதிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தமது கட்சியின் கொள்கைகளுக்கு ஒத்துப்போகும் தமிழ் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் உடன்படிக்கையை செய்து கொள்ள தயார் என்று தெரிவித்துள்ள சித்தார்த்தன், 80 களிலிருந்து விடுதலைப்புலிகளின் கொள்கைகளை எதிர்த்துவரும் தமக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவு உள்ளது என்றும் பெருமை பேசியுள்ளார்.
நடந்து முடிந்த வவுனியா நகரசபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் கூட்டமைப்பினைவிட தமது கட்சி 140 வாக்குகளே குறைவாக கிடைத்தாகவும் மக்கள் தமது கட்சியில் தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் மகிந்த அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் நடந்து முடிந்த அரசதலைவர் தேர்தலிலும் மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்தமை மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தில் மகிந்த நடத்திய தேர்தல் பிரசார கூட்டத்தில் மகிந்த, டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் சித்தார்த்தன் மேடையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
|