இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை
March 14th, 2012 at 08:20
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் போர்க்குற்றசாட்டுகளுக்குப் பதிலளிக்கப்படாமல் போனால், இலங்கையில் மீண்டும் மோதல்கள் உருவாகும் ஆபத்து இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் றொபேட் ஓ பிளேக், வொசிங்டனில் நேற்று ஏபி செய்தியாளருக்கு அளித்த செவ்வியிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் நலன்களுக்கு பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் என்பன முக்கியமானவை. இதன்மூலம் அவர்கள் உண்மையான அமைதியையும் பாதுகாப்பையும் அடைய முடியும். இல்லையேல், சொந்த சமூகத்தினரின் கோபத்தினால் நாட்டில் புதிய வன்முறைகள் அதிகரிக்கலாம்.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதலுக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் மீளத்தோன்றம் பெற்ற கிளர்ச்சிகளை தொடர்ச்சியாக அனுபவிக்கிறார்கள். உலகில் நிகழ்ந்த பல உள்நாட்டு மோதல்கள் இந்த அனுபவத்தை தந்துள்ளன.
இலங்கையிலும் இதேபோன்ற நிலையை நாம் எதிர்பார்க்கக் கூடும் என றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
மேலும், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கம் பல வீதிகளையும் அடிப்படைக் கட்டுமான வசதிகளையும் வடக்கில் கட்டியெழுப்பியுள்ளது. ஆனால் வடக்கில் உள்ள பல தமிழர்கள் தாம் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாகவே உணர்கிறார்கள்.
இந்நிலையில், தமிழர்கள் தமது பகுதியில் சுயமாக கட்டுப்பாடுகளின்றி வாழ்வதற்கு இலங்கை அரசாங்கம் வழிசெய்ய வேண்டும் என றொபேட் ஓ பிளேக் குறிப்பிட்டுள்ளார்.
|