சனல் 4 வெளியிட்ட ''தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்'' காணொளி போலியானது என்கிறார் கோத்தபாய!
March 16th, 2012 at 16:20
சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினால், இலங்கையின் கொலைக்களங்கள் பாகம் 2 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்' என்ற பெயருடன் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட காணொளி போலியானது என இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தக் காணொளியானது இலங்கை அரசிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில், திட்டமிட்ட முறையிலேயே வெளியிடப்பட்டுள்ளது.
இதனுடைய போலித் தன்மையினை நிரூபிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சு சில ஆவணப்படங்கள் மற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் வலுப்பெற வேண்டும் என்ற திட்டத்திலேயே இது வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைப் படைவீரர்கள் பரிசுத்தமானவர்கள், எந்தவித போர்க்குற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. மாறாக விடுதலைப் புலிகளே போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
மூன்று தசாப்த காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவில் உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால் அது தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருக்க முடியும்.
ஆனால் சனல்4 ஊடகமானது இலங்கைக்கு எதிராக செயற்படும் நோக்கில் போலியான தகவல்களை ஆதாரமின்றி பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
|