கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மோசடிகள்: நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறைமாவட்டத்தில் பாரிய சட்டவிரோத வாக்குப் பதிவுகள் இடம்பெற்றிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஏற்படுத்தியிருக்கும் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
நிந்தவூரைச் சேர்ந்த முகம்மது தம்பி ஹசன் அலி மற்றும் அம்பாறையைச் சேர்ந்த தயாதர்மபால கிலிதுவ ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல்செய்துள்ளன. தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸ்ஸாநாயக்க, அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சுனில் கன்னங்கர, வேட்பாளர்கள், நீர்வளங்கல் மற்றும் வடிகாலமைப்புத்துறை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, தேசநிர்மாணத்துறை அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் பணிப்பாளர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் விரும்பிய அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவுக்கு வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை, மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் சரியான முறையில் கடைப்பிடிக்கப்படவில்லை மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கள்ளவாக்குப்பதிவுகள் இடம்பெற்றிருப்பதுடன் இதனால் தேர்தல்முடிவு பாதிக்கப்பட்டுள்ளது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் பலர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களால் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டிருப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் அதாவுல்லா தனது ஆதரவாளர்களுடன் சட்டரீதியற்ற முறையில் வாக்குச்சாடிவக்குள் தனது வாகனத்துடன் நுழைந்து வாக்குப் பெட்டிகளுக்குள் வாக்குகளை நிரப்பிச் சென்றார் என கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் திருக்கோவில் பகுதியில் பிரசாரப் பணிகளை மேற்கொள்ளவிடாமல் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் தடுக்கப்பட்டதாக நேற்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info