|
இராணுவத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் இணைக்கப்படுவர்: ரம்புக்வெல
[தமிழக நேரம் : July 1st, 2009 at 10:57]
பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு 50ஆயிரம் பேரை புதிததாக இணைத்து வடக்கில் பாதுகாப்பினைப் பலப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அந்த வகையில், படையில் இணைத்துக்கொள்வதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்போது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கெஹலிய ரம்புக்வெல கூறினார்.
இடம்பெயர்ந்த மக்களுக்கே முன்னுரிமை அதேநேரம், இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கான இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுப்பதே தற்போது முன்னுரிமைக்குரிய விடயமெனக் குறிப்பிட்டிருக்கும் அமைச்சர், இந்த மக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பாரியதொரு சவாலை சந்தித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பென்பதுடன், இந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கும், அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்குமே அரசாங்கம் முன்னுரிமையளித்திருப்பதாகவும் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார். பயங்கரவாதத்தின் பிரதிபலனாகவே இந்த மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
நாடு முழுவதும் இன்று ஒரே கொடியின் கீழ் வந்திருக்கும் நிலையில், நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், 13வது திருத்தம் குறித்தோ அல்லது அதிகாரப் பகிர்வு குறித்தோ சிந்திக்கப்படுமெனவும் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
| |