ஆஸ்திரேலியாவில் ஈழத்தமிழர்கள் மூவருக்கு எதிரான வழக்கு: காவல்துறையினருக்கு நீதிமன்றம் கண்டன
[தமிழக நேரம் : February 5th, 2010 at 07:28]
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பணம் மற்றும் பொருள் உதவிகளை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆஸ்திரேலியாவில் மூன்று ஈழத்தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு தாக்கல் செய்துள்ள வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரை கைது செய்தமுறை தொடர்பாக ஆஸ்திரேலிய காவல்துறையினருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதுடன் அதற்காக காவல்துறையினருக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் மூன்று ஈழத்தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு தாக்கல் செய்திருந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் கடந்த திங்கட்கிழமை முதல் விக்டோரிய மாநில உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றன.
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பணம் மற்றும் பொருள் உதவிகளை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிவராஜா யாதவன், விநாயகமூர்த்தி ஆரூரன், ஆறுமுகம் ரஜீவன் ஆகியோர் ஆஸ்திரேலிய காவல்துறையினரால் கடந்த 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
ஆரம்பத்தில், இவர்களுக்கு எதிராக அரச தரப்பினால் ஒன்பது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் ஆஸ்திரேலிய சட்டங்களின் கீழ் எந்த குற்றங்களிலும் ஈடுபடவில்லை என்று நீதிமன்றம் ஊர்ஜிதப்படுத்தியதை அடுத்து இவர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அரச தரப்பு கடந்த மார்ச் மாதம் வாபஸ் பெற்றுக்கொண்டது. இதனைஅடுத்து, இவர்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
(இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் ஆஸ்திரேலிய சட்டங்களின் கீழ் குற்றமிழைத்தார்கள் என்று ஊர்ஜிதப்படுத்தி, அதன்மூலம் விடுதலைப்புலிகள் அமைப்பை ஆஸ்திரேலியாவில் தடைசெய்வதற்கு அரச தரப்பில் பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் அவை தோல்வியில் முடிவடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.)
இதன்படி, விநாயகமூர்த்தி ஆரூரனுக்கு எதிராக - விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பணம் மற்றும் பொருட்களை அனுப்பினார் என்பது தொடர்பான மூன்று குற்றச்சாட்டுக்களும் -
சிவராஜா யாதவன், ஆறுமுகம் ரஜீவன் ஆகியோருக்கு எதிராக - விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பணம் அனப்பினார்கள் என்பது தொடர்பான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்களை இவர்கள் மூவரும் ஒப்புக்கொள்வதாக இவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கடந்த டிசெம்பரில் விக்டோரிய உயர்நீதிமன்றுக்கு அறிவித்ததை அடுத்து, இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகள் பெப்ரவரி மாதத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. இதன்பிரகாரம், கடந்த திங்கட்கிழமை முதல் இந்த விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
நேற்றைய தினம் இந்த விசாரணைகள் நடைபெற்றபோது, ஆறுமுகம் ரஜீவனை ஆஸ்திரேலிய காவல்துறையினர் கைது செய்த முறை தொடர்பில் நீதிவான் போல் ஹொக்லன் கண்டனம் தெரிவித்ததுடன் அதற்காக காவல்துறையினர் மீது பாரதூரமான குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படலாம் என்றும் கூறியுள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஆறுமுகம் ரஜீவன் சிட்னியில் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை சந்தித்து பேசுவதற்கு சென்றுகொண்டிருந்தவேளை, அவரை சுற்றிவளைத்த காவல்துறையினர் துப்பாக்கி முனையில் காரை விட்டு இறக்கி, முழங்காலில் இருக்கவைத்து இரண்டு கைகளிலும் வலங்கிட்டு கைது செய்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
|