திருமலை துறைமுகம் மீது புலிகளின் வானூர்தி குண்டுத்தாக்குதல்
திருகோணமலை துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9:05 மணியளவில் அதிரடித்தாக்குதல் நடத்தியுள்ளது. விடுதலைப் புலிகளின் வானூர்தி துறைமுகத்தினுள் இரண்டு குண்டுகளை வீசியது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலினால் அங்கு பாரிய சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினர் வானை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை தீர்த்தனர் என்றும் -
குறிப்பிட்ட சில நிமிட நேரமாக துறைமுகப்பகுதியிலிருந்து பயங்கர வெடியோசைகள் கேட்டதாகவும் - அப்பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து திருகோணமலைக்கான தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தாக்குதல் நடத்திவிட்டுச்சென்ற விடுதலைப் புலிகளின் வானூர்தியை கலைத்துச்சென்று தாக்குதல் நடத்துவதற்கு சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் வன்னிப்பகுதிக்கு விரைந்துள்ளன என்று வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியா வான் பரப்பிற்கு மேலாக வன்னி நோக்கி தொடர்ச்சியாக சிறிலங்கா வான்படையின் வானூர்தி சென்று கொண்டிருப்பதாக அவை மேலும் தெரிவித்தன.
திருகோணமலை துறைமுகத்தினுள் நடத்தப்பட்ட தாக்குதல் சேத விவரம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை.
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
|