முல்லைத்தீவில் கரைவலைத் தொழிலாளர்கள் மீது வான்குண்டுத் தாக்குதல்: 4 படகுகள் சேதம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் கரைவலைத்தொழிலில் ஈடுபட்டவர்கள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். நான்கு படகுகள் சேதமடைந்துள்ளன. முள்ளிவாய்க்கால் பகுதியில் தொழிலாளர்கள் கரைவலை வளைப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இன்று வெள்ளிக்கிழமை காலை 6:30 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.
இத்தாக்குதலில் அந்த இடத்தில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான்கு படகுகள் கடும் சேதங்களுக்குள்ளாகியுள்ளன.
தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு பிள்ளையின் தந்தையான கஜமோகன் (அகவை 25) தலையில் காயமடைந்தார். நான்கு கரைவலைத் தொழிற் பொருட்களும் சிதைந்துள்ளன. அப்பகுதியில் உள்ள நான்கு வீடுகளும் சேதமடைந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட கரைவலை சம்மாட்டி தனேந்திரன் கூறியதாவது:
வழமை போன்று அதிகாலை 5:00 மணிக்கு கரைவலை வளைப்புத்தொழிலை தொடங்கி அதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஐந்து வானூர்திகள் பேரிரைச்சலுடன் வந்து எமது தொழிற்பகுதி மீது குண்டுகளை வீசின.
ஏற்கனவே, ஆழ்கடல் தொழிலைச்செய்ய முடியாதபடிக்கு சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தற்போது கரைவலைத்தொழிலையும் செய்யமுடியாதபடிக்கு சிறிலங்காப் படைகள் தாக்குதலை நடத்துகின்றன என்றார்.
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
|