"புலிகளின் குரல்" வானொலி 5ஆம் நாள் முதல் மீண்டும் வானலையில்...
[தமிழக நேரம் : July 3rd, 2009 at 08:19]
"புலிகளின் குரல்" வானொலியின் இணையத்தள ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் யூலை 5ஆம் நாள் கரும்புலிகள் நினைவு தினத்தன்று இணயத்தள ஒலிபரப்பினை புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட "புலிகளின் குரல்" வானொலிச் சேவை உலக வரலாற்றில் எந்தவொரு வானொலியும் சந்திக்காத இன்னல்களைச் சந்தித்த போதிலும் துவண்டு விடாது நிமிர்ந்து நின்றது.
"புலிகளின் குரல்" வானொலியை இலக்கு வைத்து 23 தடவைகள் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்த போதிலும் தாக்குதல் இடம்பெற்ற சில நிமிடங்களில் அந்த வானொலிச் சேவை மீண்டும் வானலைகளில் தவழ்ந்திருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வன்னியில் மிக மோசமான இன அழிப்புத் தாக்குதல் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போதும், தனது ஒலிபரப்பை தொடர்ந்து நடத்தி வந்த இந்த வானொலி, பல்லாயிரக் கணக்கான மக்களின் மூச்சு நிறுத்தப்பட்ட, கடந்த மே மாதம் 16ம் திகதி தனது ஒலிபரப்பையும் நிறுத்திக்கொண்டது.
தற்பொழுது இணையத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் சேவை, பின்னர் செய்கோள் ஒலிபரப்பாக விரிவாக்கம் பெறும் என, "புலிகளின் குரல்" வானொலி நிலைய கலையகத்தினர் தெரிவித்துள்ளனர்.