வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் துயரைத் துடைப்பதற்கு அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும்!
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் துயரைத் துடைப்பதற்கு அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைதிப் பிரார்த்தனை ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஒன்றுகூடிய பல்கலைக்கழக துணைவேந்தர், விரிவுரையாளர்கள், மாணவர்கள் 15 நிமிடம் அமைதிப் (மெளனம்) பிரார்த்தனையை மேற்கொண்டனர்.
யுத்த முன்னெடுப்புகளால் வன்னியில் இடம்பெயர்ந்து அல்லல்படும் மக்களுக்கு அனைத்துலக மற்றும் உள்ளுர் தன்னார்வ நிறுவனங்கள் உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த அமைதிப் பிரார்த்தனையின் ஈடுபட்டுள்ளனர்.
இதேநேரம் நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்..
வன்னி பெருநிலப்பரப்பைக் கைப்பற்றும் நோக்கோடு இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் மோதல்கள் காரணமாக போர் நடவடிக்கைகளுடன் தொடர்பல்லாதவர்கள் பாதிக்கப்படுவது வேதனைக்குரியது எனவும்இ நிச்சயமற்ற இருப்பு நிலையோடும் மிரட்சியும் அச்சமும் கலந்த வாழ்வோடும் வறுமையோடும் போராடும் மக்களின் துயரினைக் போக்குவது அவசியமானது.
யாழ் குடாநாடு தழுவிய ரீதியில் ஏற்பட்ட இடம்பெயர்வின்போது எம்மைத் தாங்கிய உறவுகள் இன்று மருத்துவ, இருப்பிட, உணவுத் தேவைகள் என்பல தேவைகளுக்காக ஏங்கி நிற்கின்றனர். அவர்கள் அனைவரதும் சகல தேவைகளையும் பூர்த்தி செய்வது இயலாது எனினும், அரசு தனது நலன்சார் திட்டங்களையும் அனர்த்த நிவாரண உதவிகளையும் பாரபட்சமின்றி வழங்கும் வண்ணம் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info