இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் - தமிழக முதல்வர் சந்திப்பு!
[தமிழக நேரம் : February 1st, 2010 at 07:42]
இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றுள்ள சிவசங்கர மேனன் இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னையில் தமிழக முதலவர் மு.கருணாநிதியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய எம்.கே. நாராயணன் அப்பதிவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, அப்பதவிக்கு சமீபத்தில் நியமிக்கப்பட்ட மேனன், இன்று சென்னையில் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சந்திப்பு முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் - மரியாதை நிமிர்த்தமாக தமிழக முதல்வருடனான தனது சந்திப்பு இடம்பெற்றதாகவும் அங்கு பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வருடன் தான் ஆலோசனை நடத்தியதாகவும் கூறினார்.
சிறிலங்காவில் தமிழ்மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், மறு சீரமைப்புப் பணிகள், சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உட்பட பல விடயங்கள் குறித்து முதல்வருடன் ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சிறிலங்காவிலுள்ள தமிழர்களின் நல்வாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் இயன்றவரை இந்திய அரசு மேற்கொள்ளும் என்று தமிழக முதல்வரிடம் தான் உத்தரவாதம் அளித்ததாகவும் மேனன் கூறினார்.
சிறிலங்காவில் அரச தலைவர் தேர்தல் நடைபெற்று முடிவடைந்த பின்னர், தேர்தலில் இந்தியா விரும்பிய மகிந்த ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்றுள்ள சிவசங்கர் மேனன் தமிழக முதல்வரை சந்தித்து பேசியமை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாகவும் -
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினியை விடுதலை செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் எழுந்துள்ளதாகவும் முடிவை அறிவிக்கும் அதிகாரம் தற்போது தமிழக அரசின் பக்கம் திரும்பியுள்ளதால் நளினியின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எடுக்கக்கூடிய சாதகமான நிலைப்பாடு காங்கிரஸ் கட்சியினருக்கு பிடிக்காமல் போகலாம் என்ற நிலை தமிழகத்திலும் மத்தியஅரசின் பக்கமும் காணப்படுவதால், அது பற்றியும் இந்த சந்திப்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என்றும் - விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
|