விழுப்புரம் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக செயல் வீரர்கள் கூட்டம் விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலை ஜெயம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் ஏ.கே.மணி தலைமை தாங்கினார். செயலாளர் ஜானகிராஜா வரவேற்றார்.
கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ம.தி.மு.க. காட்டாற்று வெள்ளத்தினையும், சூறைக்காற்றினையும் தாண்டி பல தோல்விகளை கடந்து எழுச்சியுடன் எழுந்து நிற்கின்றது. ஆதலால் தோல்வியைப்பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை.
இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு சோனியா தலைமையிலான மத்திய அரசும், அதற்கு உறுதுணையாக இருந்த கருணாநிதியும் காரணம் ஆகும். 5 ஆண்டுகளாக இலங்கை அரசுக்கு ஆயுதம் அனுப்பியது. தமிழக சட்டமன்ற தீர்மானத்தை ராஜபக்சே காலில் போட்டு மிதித்தது. இதனைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இன்றைக்கு வணங்காமண் கப்பலில் உள்ள உணவு பொருட்களை இறக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறுகிறார்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலையைப்போல உலகத்தில் வேறு எங்கும் நடந்தது கிடையாது. ம.தி.மு.க. தொடங்கியபோது இலங்கை பிரச்சினைக்கு தனி ஈழம் ஒன்றுதான் தீர்வு என்று கூறினோம். இன்றைக்கும் அதனைத்தான் கூறுகின்றோம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கின்றார்.
தமிழ் இருக்கும் வரை, மானமுள்ள தமிழர்கள் இருக்கும் வரை தொடர்ந்து தமிழ் ஈழத்தையும், விடுதலைபுலிகளையும் ஆதரிப்போம்.