தடுப்புக்காவலை முடிவுக்கு கொண்டுவருமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை
[தமிழக நேரம் : February 2nd, 2010 at 11:14]
போரின் பின்னர் சரணடைந்த முன்னாள் போராளிகள் 11 ஆயிரம் பேர் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களின் காலவரையறையற்ற தடுப்புக்காவல் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் நியூயோர்க்கை தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த எட்டு மாதங்களாக மர்ம முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இந்த செயலானது சர்வதேச விதிகளை மீறும் நடவடிக்கையாகும். சந்தேக நபர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இடம் சிறிலங்கா அரசினால் தெரியப்படுத்தப்படவேண்டும். அவர்களை அவர்களின் உறவினர்களும் சட்ட அலோசகர்களும் சென்று சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படும் சாத்தியங்கள் இருப்பின் அதனை உடனடியாக ஆரம்பித்துவிட்டு, குற்றம் புரியாதவர்கள் என்று இனம்காணுபவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
பன்னாட்டு அமைப்புக்களோ உள்நாட்டு மனித உரிமைகள் அமைப்புக்களோ உறவினர்களோ சென்று சந்திக்க முடியாத வகையில் இந்த 11 ஆயிரம் பேரும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதால், இவர்களில் எத்தனைபேர் படையினரால் கைது செய்யப்பட்டார்கள்? எத்தனைபேர் சரணடைந்தார்கள் போன்ற விவரங்களை பெற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலை காணப்படுகிறது.
தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்த கைதிகள் விடயத்தில் சிறிலங்கா அரசு காண்பிக்கும் வெளிப்படையற்ற போக்கு, அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் அல்லது காணாமல்போகும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்த கைதிகளின் உரிமைகள் உரிய விதத்தில் மதிப்பளிக்கப்படாவிட்டால், சிறிலங்காவுக்கு உதவும் சர்வதேச நாடுகள் எந்த விதத்திலும் இந்த கைதிகளை தடுத்துவைத்திருக்கும் சிறிலங்கா அரசின் தடுப்புமுகாம்களுக்கு உதவி செய்யப்போவதில்லை.
ஆகவே, சர்வதேச விதிமுறைகளை மீறும் இந்த காலவரையறையற்ற தடுப்புக்காவலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசு உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.
- இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|