மகிந்த அரசுக்கு எதிராக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு செல்லவுள்ள ஆஸி. சட்டத்தரணிகள்!
[தமிழக நேரம் : February 3rd, 2010 at 07:39]
அரசதலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரினால் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கு எதிராக அவுஸ்திரேலியாவை சேர்ந்த சிறிலங்கா சட்டத்தரணிகள் சிலர் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த முறைப்பாட்டின் பிரதியொன்று சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் இஸாசி ஒவேதாவிற்கும் அனுப்பப்படவுள்ளதாக அந்தச் சட்டத்தரணிகள் குழுவின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிடின், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் தலையிடும் வகையில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் ஆஸ்திரேலியாவிலுள்ள சிறிலங்கா சட்டத்தரணிகள் சார்பில் பேசவல்ல சட்டத்தரணியை மேற்கோள்காட்டி எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொன்சேகாவுக்கு ஆதரவாக தேர்தலில் பிரசாரங்களில் கலந்துகொள்வதற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து சென்ற சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் சிறிலங்கா குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
|