|
ஒலிம்பிக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்
இந்திய அணியின் 108 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில், முதல் முறையாக தனிநபர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் அபினவ் பிந்த்ரா. துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் கலந்துகொண்ட இவர், நேற்று நடந்த பரபரப்பான இறுதிச் சுற்றில் அபாரமாக வென்று, தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதற்கு முன்பு ஹாக்கியில் மட்டுமே இந்தியா 8 முறை தங்கம் வென்றிருக்கிறது. தனி நபர் பிரிவில் தங்கப் பதகம் வென்றதேயில்லை.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. 204 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து 56 வீரர், வீராங்கனைகள் அடங்கிய அணி பெய்ஜிங் சென்றுள்ளது. ஹாக்கியில் இந்தியாவுக்கு ஏதாவது பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக ஒவ்வொரு முறையும் நம்பிக்கை வைப்பதும் அது பொய்த்துப்போவதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தகுதியைக்கூட ஹாக்கி அணி பெறாததால், இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. பிற போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கம் கிடைத்து, பதக்கப் பட்டியலிலாவது இந்தியா இடம் பிடிக்குமா என்று இந்திய ரசிகர்கள் ஏங்கித் தவித்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் தங்கம் வென்று ஆனந்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அபினவ் பிந்த்ரா.
துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் நேற்று அவர் களமிறங்கினார். உலக அளவில் 17வது இடத்தில் உள்ள அவருக்கு ஏதன்ஸ் ஒலிம்பிக் சாம்பியன் சூ கினான் (சீனா), பின்லாந்தின் முன்னணி வீரர் ஹென்றி ஹக்கினன் ஆகியோர் கடும் சவாலாக இருந்தனர்.
தொடக்க சுற்றுகளில் சூ கினான், ஹக்கினன் இருவரும் அபாரமாகப் புள்ளிகளைக் குவித்து முன்னிலை வகிக்க, அபினவ் 4வது இடத்தில் பின்தங்கியிருந்தார். 8வது சுற்றின் முடிவில் 2வது இடத்துக்கு முன்னேறினார். 9வது சுற்றின் முடிவில், முதலிடத்தில் இருந்த சீன வீரருக்கு மிக அருகில் வந்தார்.
இறுதிச் சுற்றில் படுதுல்லியமாகக் குறிபார்த்து சுட்டு, முதலிடத்தைப் பிடித்தார் அபினவ். அவர் மொத்தம் 700.5 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். சூ கினான் (699.7) வெள்ளிப் பதக்கமும் ஹக்கினன் (699.4) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
பத்து வாய்ப்புகள் கொண்ட இறுதிச் சுற்றில் அபினவ் பிந்த்ரா 104.5, சூ கினான் 102.7, ஹக்கினன் 101.4 புள்ளிகள் பெற்றனர். இதே போட்டியில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய வீரர் ககன் நரங் (595 புள்ளி) 9வது இடத்தையே பிடித்தார்.
இதற்கு முன்பு, 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்றது. அதன் பின்னர், 28 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 1896ல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. 1900ல் இந்தியா முதல் முறையாகப் பங்கேற்றது. இந்த 108 ஆண்டுகளில், தனி நபர் பிரிவில் இந்தியா இதற்கு முன்பு தங்கப் பதக்கம் வென்றதில்லை.
ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ள அபினவ் பிந்த்ராவுக்கு வாழ்த்துகளும் பரிசுகளும் குவிகின்றன.
|
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info |
| |