ஜோர்ஜியாவின் கோரி மற்றும் ஏனைய பகுதிகளில் நிலைகொண்டுள்ள ரஷ்யப் படைகள் தாம் அளித்த வாக்குறுதியின்படி இன்று திங்கட்கிழமை வெளியேறுவார்களென ஜோர்ஜிய மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜோர்ஜியா மற்றும் ரஷ்யாவுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் ரஷ்யப் படைகளை மீளப் பெற்றுக்கொள்வதாக ரஷ்ய ஜனாதிபதி டிமித்திரி மெட்வடேவ் உறுதியளித்திருந்தார்.
இந்த யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் ஓகஸ்ட் 7 ஆம் திகதிக்கு முன்னர் ரஷ்யப் படைகள் வெளியேறுவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தபோதிலும், ரஷ்யப் படைகள் தமது இராணுவ நிலைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், தெற்கு ஒஸெட்டியாவின் தலைநகரான ஸ்கின்வலியிலிருந்து ரஷ்யாவை நோக்கி, ரஷ்ய இராணுவத்தின் தலைமையிலான வாகனங்கள் செல்வதாகவும் ஜோர்ஜிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இருப்பினும், ரஷ்யப் படைகள் வெளியேறுகின்றமை தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதேவேளை, ஜோர்ஜியாவிலிருந்து ரஷ்யப் படைகள் இன்று நண்பல் முதல் வெளியேறுவார்களென ரஷ்ய ஜனாதிபதி டிமித்திரி மெட்வடேவ் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஸியிடம் தெரிவித்துள்ளார்.
சமரச உடன்படிக்கையை ரஷ்யா நடைமுறைப்படுத்தத் தவறினால் கடும் பின்விளைவுகளை ரஷ்யா சந்திக்க நேரிடுமென பிரான்ஸ் ஜனாதிபதி டிமித்திரி மெட்வடேவ்க்கு எச்சரித்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி மேலதிக விபரங்கள் தெரிந்தால்
தமிழ்செய்தி இணையத்தளத்திற்கு அனுப்பி வைக்கலாம். அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
முகவரி:
Tips@tamilseythi.info